July 05, 2008

உரப்பற்றாக்குறை - காரணம் என்ன?


-ஜி.ஆனந்தன், தூத்துக்குடி

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திய மன்மோகன் சிங் அரசாங்கம், புதிய உர விலை கொள்கையையும் அறிவித்துள்ளது. ஒவ் வொரு காம்ப்ளக்ஸ் உரத்தையும் என்ன விலைக்கு விற்கலாம் என்பதை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவதாக கூறியுள்ள நிதியமைச்சர் இந்த புதிய உரவிலைக் கொள்கை ஏப்ரல் 1 முதல் அமலாக் கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் தாறுமாறாக உயர்ந்ததன் விளைவாக இரசாயன உரங்களின் இடுபொருட்களின் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளன. உதாரணமாக டி.ஏ.பி உரம் தயா ரிக்க சல்பர் மற்றும் ராக் பாஸ்பேட் மிகவும் அவசிய மாகும்.

பிப்ரவரிக்கு பின் தற்போது மேலும் மேலும் பெட்ரோலியப் பொருட்கள் விலை விண்ணைத் தொட இந்த இடு பொருட்களின் விலையும் விண் ணைத் தொடுகின்றது. ஆகவே டி.ஏ.பி. உரத்தின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த இடத்தில்தான் 1991ல் கண்மூடித்தனமாக ஆரம்பிக் கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் விளையாட்டு பற்றியும், உரமானியக் கொள்கைகள் பற்றியும் விளக்க வேண்டியுள்ளது.

உரமானியத்தின் வரலாறு

1977ல் முதல் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை ஒட்டி உர நிறுவனங்கள் உற்பத்தி தொடர ஆரம்பிக்கப்பட்டதுதான் உரமானியம். உரங்களை உற்பத்தி செலவுக்கே விற்பனை செய்ய முடியாதா கையால், உற்பத்தி செலவுக்கும் குறைவான விற் பனை விலைக்கும் உள்ள இடைவெளியே உரமா னியம் ஆகும்.

உரமானியத்திற்காக அரசு செலவிட்டதில் உள் நாட்டு உற்பத்திக்கு அதிகமாகவும் இறக்குமதிக்கு குறைவாகவும் இருந்தது. இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. ஏனெனில் அப்பொழுது சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறைவாக இருந்த தற்கு முக்கியமான காரணம் உலகின் இரண்டு பெரிய சந்தையான சீனாவும், இந்தியாவும் உரம் இறக்குமதியை மிகமிக குறைவாக செய்ததுதான். உள்நாட்டின் தேவை பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தியின் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டதால், இறக்குமதிக்கான தேவை குறைவாகவே இருந்தது. உள்நாட்டு உற்பத்தி விலை, ஏன் பன்னாட்டு விற் பனை விலையை விட அதிகமாக இருந்தது என்றால், உள்நாட்டின் பல உர நிறுவனங்கள் யூரியா உற்பத் திக்கு இடுபொருளாக நாப்தா என்ற பெட்ரோலியப் பொருளை இறக்குமதி செய்தன. அவ்வாறு இறக்கு மதி செய்யப்பட்ட நாப்தாவில் அரசு கலால்வரி மற்றும் சுங்கவரி என பல்வேறு வரிகளை மிக அதிகமாக விதித்ததின் விளைவேயாகும். இந்த இறக்குமதி வரிகளை எடுத்துவிட்டு சர்வதேச சந்தை விலைக்கே உர நிறுவனங்கள் இறக்குமதி செய்யஅனுமதிக்க வேண்டுமென உர நிறுவனங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளை அன்றைய மத்திய அரசு நிரா கரித்தது. அதற்கு காரணம் இறக்குமதி வரிகளின் மூலம் கிடைத்த வருமானம் மானியமாக வழங்கி யதைவிட அதிகமாக இருந்ததேயாகும்.

சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை குறை வாக இருந்தவுடன், அன்றைய தேசிய ஜனநாயக கூட்டணிஅரசு உள்நாட்டு உற்பத்திக்கு பதிலாக இறக்குமதி செய்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக உள்நாட்டில் இயங்கிக் கொண்டி ருந்த பல உர நிறுவனங்களை முடக்கினர். இந்திய உணவுக் கழகத்தின் தால்ச்சர்,கோரக்பூர், சிந்திரி மற்றும் கோர்பா உரத் தொழிற்சாலைகளையும், இந் துஸ்தான் உர நிறுவனத்தின் பாருணி, துர்காபூர் மற்றும் ஹால்டியா தொழிற்சாலைகளையும் மூடிவிட 2002ம் ஆண்டு பாஜக அரசு முடிவெடுத்தது. இந்த தொழிற்சாலைகளின் மொத்த உற்பத்தி திறன் 50 லட்சம் டன் யூரியா என்றும், அரசின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் அந்தக் கொள்கை முடிவுக்கு எதிராக “பெர்ட்டிலைசர் வொர்க்கர்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா” அறிவித் தது. அரசின் முடிவுகளுக்கு எதிராக உரத் தொழி லாளர்களை திரட்டி போராடி வந்தது.

மேலும், யூரியாவிற்கு இடுபொருளான இறக்கு மதி செய்யப்பட்ட நாப்தாவிற்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தலாம். நமது நாட்டின் வட மாநிலங்களில் குஜராத்திலிருந்து வடக்கு உத்தரப்பிரதேசம் வரை சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மும்பை கடல்பகுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டு பல உரநிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு பல மடங்கு குறையும். உதாரணமாக மார்ச் 2007ல் ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு தேசிய உரத் தொழிற்சாலையின் விஜெய்ப்பூர் 1ல் ரூ.5,078ஆக இருந்தது. அந்த தேதியிலேயே ஸ்பிக் நிறுவனத்தில் ஒரு டன் யூரியாவின் உற்பத்தி செலவு ரூ.20,050 ஆக இருந்தது. இந்த இரண்டுக்கும் வித்தியாசத்திற் கான காரணம் இடுபொருளாகும். தேசிய உரத் தொழிற்சாலை இயற்கை எரிவாயுவையும், ஸ்பிக் நிறுவனம் நாப்தாவையும் இடுபொருளாக பயன்படுத் தியது. ஆகவே, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி னால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு குறைவான விலையில் உரம் தயாரித்து அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், அன்றைய அரசு இயற்கை எரிவாயுவை உரத் தொழிலுக்கு அளிப்ப தற்கு பதிலாக தனியார் மின் தயாரிப்பாளர்களுக்கு வழங்க முன்னுரிமை அளித்தது. ஏற்கெனவே நிலக்கரியில் மிகவும் மலிவாக மின் உற்பத்தி செய்து வரும்பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக மிக அதிக விலை கொடுத்து இந்த தனியார் மின் துறை யை மத்திய அரசு ஊக்குவித்தது. இராமநாதபுரத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு குழாய் மூலம் ஸ்பிக் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென இந்தக்கட்டு ரையாளர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ஸ்பிக் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் சிந்திரியில் நடைபெற்ற பெர்ட்டிலைசர் வொர்க்கர்ஸ் பெடரேசன் ஆப் இந்தியாவின் தேசிய சிறப்பு மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தத் தீர் மானம் அன்றைய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் பெடரேசன் சார்பில் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், இறக்குமதியை நம்பும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இந்தியா உரம் இறக்குமதி செய்ய ஆரம்பித்தவுடன் சர்வதேச சந்தையில் உரத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இறக்குமதி செய்வதற்கு முன் 2002-03ல் ஒரு டன் னின் விலை 110 டாலராக இருந்தது. இறக்குமதி ஆரம்பித்தவுடன் 2004ல் 200 டாலரைத் தொட்டது. பின்னர் ஏப்.2007ல் 335 டாலராகவும், பிப்.2008ல் 410 டாலராகவும் உள்ளது. நாப்தாவின் விலை 2006ல் டன் ஒன்றிற்கு 572 டாலராக இருந்தது. தற் போது 1150 டாலராக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் யூரியாவின் இறக்குமதியும் உயர்ந்துள்ளது. 2004-05ல் 6.41 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்த அரசு 2007-08ல் 69.63 லட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. இதற்கு முக் கியக் காரணம் ஸ்பிக் போன்ற நாட்டின் பல பகுதி களில் உள்ள நாப்தா இடுபொருளாக உள்ள உர நிறுவனங்கள் உர உற்பத்தியை நிறுத்தியதுதான். பெட்ரோலியப் பொருட்களில் முன்னேறிய நாடு களின் நிறுவனங்கள் கூட்டாக அடிக்கும் கொள்ளை மற்றும், இந்தியா தனது உரத்தேவைக்கு இறக்கு மதியையே நம்பி இருக்க வேண்டிய நிலை போன்ற வற்றால் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை ஒவ்வொரு நாளும் கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண் டிருக்கிறது.

இதற்கிடையே இடதுசாரிகள் மத்திய அரசை உரக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர வலி யுறுத்தினர். குறிப்பாக மூடப்பட்ட உர நிறுவனங் களை திறக்க வேண்டுமெனவும், இயற்கை எரிவாயு வை உர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூடப்பட்ட இந்திய உணவுக் கழக தொழிற்சாலைகளையும், இந்துஸ்தான் உரத்தொழிற் சாலைகளையும், இயக்கத் தேவையான நடவடிக் கைகளை எடுக்க முடிவெடுத்துள்ளது ஒரு வரவேற் கத்தக்க அம்சமாகும்.

ஆனால் நடைமுறையில் இந்த கொள்கை அமலாகவில்லை. உதாரணமாக கிருஷ்ணா-கோதா வரி படுகையில் (ஆந்திர மாநிலம் கடப்பாவில்) கிடைத்த இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் சென்னைக்கும் அங்கிருந்து தூத்துக்குடி வரை கொண்டு வருவதாக தெரிவித்த ரிலையன்ஸ் நிறு வனம் பின்னர் தனது திட்டத்தை மாற்றி ஆந்திராவில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை குஜராத்தில் தனது சுத்திகரிப்பு ஆலை உள்ள ஜாம்நகர் வரை கொண்டு செல்ல குழாய் அமைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய இயற்கை எரிவாயு கிடைக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் கடலூரில் இயற்கை எரிவாயு கமிஷன் (ஓஎன்ஜிசி) கச்சா எண்ணெய்யை எடுத்துக்கொண்டு இயற்கை எரி வாயுவை எரித்துவீணடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாளுக்கு எரிந்து வீணாகும் இயற்கை எரிவாயு வின் அளவு ஸ்பிக் உர நிறுவனத்தின் ஒருநாள் இடு பொருள் தேவையாகும். மாநில அரசும் மத்திய அரசும் வீணாகும் எரிபொருளை குழாய் மூலம் கொண்டு வருவதால் உர உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் மேலும் ஆறு லட்சம் டன் யூரியா அதிகரிக்கலாம். இராமநாதபுரத்தில், காவிரி படுகையில் கண்டுபிடிக் கப்பட்டுள்ள இயற்கை எரிவாயுவையும் குழாய் மூல மாக தூத்துக்குடிக்கு இணைக்கலாம். மேலும், இந்தப் பகுதியில் மிக அதிகமாக இயற்கை எரிவாயு கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல புதிய உரத் தொழிற்சாலைகளை அமைத்தால், நாட்டின் உரத் தேவை பூர்த்தியாகும் என்பதைவிட நாம் சர்வதேச சந்தையில் உரத்தை ஏற்றுமதியே செய்யலாம்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் தெரிவித்துள்ள மற்றொரு ஆலோசனையான நிலக்கரியை பயன்படுத்துவது என்பதும் நமது நாட்டைப் பொறுத்தவரை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆலோசனையாகும். இராமகுண்டம் உரத் தொழிற்சாலை ஏற்கெனவே இந்த முறையில்தான் வடிவமைக்கப்பட்டதாகும். அதில் தற்போது சில மாற்றங்களே போதுமானது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நமது நாட்டில் நிலக்கரி வளம் மிக அதிகமாக உள்ளதால் சீனாவைப்போல் இந்தி யாவும் பெட்ரோலியப் பொருட்களை அண்டியிராமல் உர உற்பத்தியில் தன்னிறைவை அடையலாம். தேவை அரசின் கொள்கை உறுதிப்பாடே.


No comments: