எளிமை அவரது இயல்பு! இனிமை அவரது பண்பு!!
-கே.வரதராசன்
1974ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டேன். ஜலந்தரில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில்தான் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களை நேரடியாக பார்த்தேன்.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தா லும் அதை பொறுமையாக, நுட்பமாக அணுகுவது அவருடைய சிறப்புப்பண்பு என்பதை அப்போது அறிந்தேன். தமிழ கத்தில் நாராயணசாமி நாயுடு தலைமை யில் இலவச மின்சாரம் கேட்டு விவசா யிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசியபோது, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தோழர்கள் எதிர்ப்பு தெரி வித்தார்கள். இலவச மின்சாரம் கேட்பது பணக்கார விவசாயிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும். நம்முடைய சங்கம் ஏழை, எளிய விவசாயிகளை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று கூறினர்.
அப்போது தலையிட்டு பேசிய தோழர் சுர்ஜித், நம்முடைய சங்கம் ஏழை, எளிய விவசாயிகளைச் சார்ந்துதான் நிற்க வேண்டும். அந்த அடித்தளத்தில்தான் கிராமப்புற இயக்கம் கட்டப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்பது யாராக இருந்தாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் ஏழை எளிய விவசாயி களும் அடக்கம். இதை கருத்தில் கொள் ளாமல் கே.வரதராசன் முன்வைத்த கருத்தை விமர்சிப்பது சரியல்ல.
மாறாக இப்போது எழுந்திருக்கக் கூடிய விவசாயிகளின் நியாயமான கோரிக்கை அடிப்படையிலான போராட் டத்திற்கு வடிவம் கொடுத்து இணைந்து போராடி அதன் மூலம் வழிகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற முடியாது. இந்தியாவில் விவசாய வளர்ச் சியில் ஏற்ற இறக்கம் உண்டு. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடது சாரிகள் அரசு அமைந்துள்ள மாநிலங் களில் நிலச்சீர்திருத்தத்தின் மூலம் நிலக் குவியல் உடைக்கப்பட்டு நிலப்பிரபுத் துவம் ஒடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங் களில் விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப முதலாளித்துவ முறை பெருமளவு வளர்ந்துள்ளது.
பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் நிலப்பிரபுத்துவ முறை அப்படியே தொடர் கிறது. இந்த வேறுபாடுகளை அழகாக எடுத்துக்காட்டிய சுர்ஜித் அவர்கள், அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற் பவே கோஷங்களை உருவாக்க வேண் டும், ஸ்தலப்போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார். சற்று வேடிக்கை யான தொனியில் “வங்காள மருந்து தமிழ் நாட்டுக்கு ஒத்துவராது” என்றும் கூறி னார். “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது மொழி மற்றும் தேசிய இனங்களின் அடிப்படையில் மட்டுமின்றி விவசாய உற்பத்தி முறையிலும் உள்ளது என்று விளக்கினார்.
1984ம் ஆண்டு தோழர் சுர்ஜித் மற்றும் அவரது துணைவியார் சோவியத் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். நானும் அவர்களோடு சென்றிருந்தேன். ஒருமாத காலம் நீடித்த இந்த சுற்றுப்பயணத்தின் போது திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் தன்மை, நீர்ப்பாசனம், பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை எழுப்பினார். தமிழ்நாட்டில் ஒருமா வட்டத்தை பற்றி அறிந்து கொள்ள அவர் காட்டிய ஆர்வம் மிகவும் அரிதான ஒரு குணாதிசயமாகும். மிகப்பெரிய தலைவ ரான அவர் விவசாய சங்க ஊழியரான என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நானும் பல்வேறு விஷயங்களை தேடித்தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர் உருவாக் கினார். உண்மையில் சொல்லப்போனால் அந்த ஒருமாத கால சுற்றுப்பயணம் ஒரு ஊழியர் பயிற்சி முகாமாகவே எனக்கு அமைந்தது.
அவரது இன்னொரு சிறப்பு எளிமை, சிக்கனம். தனிப்பட்ட முறையில் அவர் சிக்கனமாக இருந்தார் என்பது மட்டு மல்ல இயக்கமும் கூட அவ்வாறே இருக்க வேண்டும் என்று விடாது வலி யுறுத்துவார். விவசாயிகள் சங்க மாநிலக் குழுக்களுக்கு அலுவலகம் கட்ட வேண் டும் என்று கோரிக்கை வந்தால் அவர் எழுப்பும் முதல் கேள்வி, விவசாயிகள் சங்கத்திற்கு எத்தனை ஊழியர்கள் உள் ளனர்? அவர்களது மாத ஊதியம் என்ன? அது முறையாக வழங்கப்படு கிறதா? என்பதோடு கட்டிடம் கட்ட யாரிடம் நிதி வசூல் செய்வீர்கள் என்றும் கேட்பார்.
விவசாயிகள் சங்கம் பலமாக உள்ள மாநிலங்களிலிருந்து வசூல் செய்து பலவீனமான மாநிலங்களுக்கு ஊழியர் அலவன்சுக்கு வழங்குவது என்ற நடை முறையை துவக்கி வைத்தவரும் தோழர் சுர்ஜித்துதான். அந்த அடிப்படையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மையத்திலிருந்து இப்போதும் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.55 ஆயிரம் ஊழியர் அலவன்சாக வழங்கப்படுகிறது.
1984ம் ஆண்டுக்குப்பிறகு பலமுறை என்னை சந்திக்கும் போதெல்லாம் டில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். 1997ல் சந் திக்கும் போது இனியும் உனக்கு அவகா சம் கொடுக்க முடியாது. உடனடியாக டில்லி வந்துவிட வேண்டும் என்று கூறினார்.
விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பணிக்காக டில்லி சென்றபிறகு சங்கத்திற்கு என்று சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும், கார் வாங்கவேண்டும் என்று கூறியபோது, விவசாயிகள் சங்கத் திற்கு அதிகமான ஊழியர்களை நியமிப் பதும் அவர்களது குடும்பத்தை பாதுகாப் பதும்தான் மிக முக்கியம். கட்டிடம், கார் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
தனிப்பட்ட தோழர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டி, உணர வைத்து அவர்களை பாது காப்பது என்பதுதான் அவரது அணுகு முறை. இந்த அணுகுமுறை ஏராளமான தோழர்களை காப்பாற்றியுள்ளது.
தவறு செய்த தோழர்களை திருத்த அவர் எடுத்துக்கொள்ளும் நேரமும் காட்டும் பொறுமையும் யாராலும் எதிர் பார்க்க முடியாத ஒன்று. அந்த அளவுக்கு ஊழியர்களை பாதுகாப்பதில் அவர் அக்கறை காட்டுவார்.
1936ம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தை துவக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். அன்று துவங்கி விவசா யிகள் இயக்கத்தை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் அவரும் ஒருவர். கட்சியை உருவாக்கிய தலை வர்கள் மார்க்சிய, லெனினிய தத்துவத் தில் அறிவுக்கனல்களாக திகழ்ந்தவர் கள். இதில் சுர்ஜித்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் மார்க்சிய தத்துவத்தை கள அனுபவத்தோடு பொருத்துவதில் தனித்திறமை கொண்டவர். அவரது உழைப்பும், பொறுமையும்தான் அவரை கட்சியின் உயர்ந்த பொறுப்புகளுக்கு கொண்டு சென்றது.
1977க்குப் பிறகு மத்திய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங் களில் அவர் மையப்புள்ளியாக இருந்தார். காங்கிரசுக்கு மாற்றாகவும் மதவெறி சக்திகளுக்கு மாற்றாகவும் பல்வேறு கட்சிகளை ஈர்த்து அவரால் அணிவகுப்பு களை உருவாக்க முடிந்தது. அதனால் தான் அவரை பத்திரிகைகள் “கிங் மேக் கர்” என்று அழைத்தன. ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தம்மை ஒரு எளிய விவசாயி என்று அழைத்துக்கொள்ளவே பிரியப்பட்டார்.

No comments:
Post a Comment