January 15, 2007

நாராயணமூர்த்தியின் கனவு ( உளறல் )


“இந்தியாவிலுள்ள வறுமையை ஒழிக்க முதலாளித்துவமே ஒரே வழி” என்று திருவாய் மலர்ந்துள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. அதோடு நிற்கவில்லை.“அந்த ஒரு விஷயம்தான் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு குறிப்பிட்டார்.


முதலாளித்துவத்தால் வறுமை தீர்ந்து விட்டது என்று ஒரு நாட்டை உதாரணமாகக் காட்டியிருந்தால் அவர் கூறுவது நம்பும்படியாக இருந்திருக்கும்.

2000ல் வறுமையில் வாழும் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது. 2005ல் அந்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது.வறுமையால் வாடுபவர்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் குழந்தைகளாவர். இது அமெரிக்க அரசு தரும் அதிகாரப்பூர்வ தகவலாகும். இவர் கூறும் முதலாளித்துவத்தின் தலைமையகத்துடைய லட்சணமே இது தான். இந்தியாவை விட பணம் அதிகம் புழங்கும், மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக்காவுக்கே இந்தக் கதியென்றால் நமக்கு கட்டுப்படியாகுமா?


கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்திய அனைத்து நாடுகளும் தோற்று விட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.“பார்த்தீர்களா...கம்யூனிச நாடுகளில் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?தற்போது முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தியவுடன் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை பிரமாதமாக உள் ளது”என்று கூறியிருந்தால் கேட்பவர்களுக்கு நம் பிக்கையை ஊட்டியிருக்கும்.சோஷலிச அமைப்பு சிதைக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிலும் சரி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்துள்ளது என்பதுதானே உண்மை!



அமெரிக்காவின் சட்டவிரோதத் தடைகளையும் மீறி சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் கியூபா பெரும் சாதனைகளைச் செய்தது சோச லிசத்தினால்தானே? வெறும் 1.9 சதவீதத்தினர் தான் அங்கு வேலைவாய்ப்பின்றி
இருக்கின்றனர். கம்யூனிசம் தோல்வியுறவில்லை.



“முந்தைய சமூகங்களுக்குச் சிறிதும் குறையாத அளவில் இன்றைய முதலாளித்துவச் சமூகம்,மக்களில் மிகவும் அதிகமான பெரும்பான்மையினரைச் சிறு பான்மையினர், மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிற சிலர் சுரண்டுவதற்காகப் பயன்படுத்து கின்ற பகட்டான நிறுவனமே (முதலாளித்துவம்) என்பது அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது” என்று ஏங்கெல்ஸ் கூறியது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகத்தான் இருக்கிறது.



லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவீன பொருளாதாரக் கொள்கைகளையும், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து வருவது முதலாளித்துவத்தின் வெற்றி என்று நாராயணமூர்த்தி கருதிக்கொள்கிறாரா?



ஆட்குறைப்பு உரிமை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார். சமூகத்தின் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள். கோடிக் கணக்கானோர் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆட்குறைப்பு உரிமைகோரும் நாராயண மூர்த்தியின் கவனம் தன் சகாக்களின் லாபத்தைச் சுற்றியே வருகிறது. அது சரி, குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி என்ன கவலை?



அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையுமே தனியார் மயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேருவின் நவீன இந்தியாவின் ஆலயங்களில் ஒன்றான பொதுத்துறை நிறுவனத்தில் இளம் பொறியாளராக பணியில் அமர்வது தனது கனவாக இருந்தது என்று 2000ல் அளித்த பேட்டியில் தெரிவித்தவர் இந்த நாராயணமூர்த்தி (ஆதாரம் -இந்தியா-செமி னார்.காம்).அந்த ஆலயங்களைத்தான் கரசேவை நடத்தி சின்னாபின்னமாக்கத் துடிக்கத் தொடங்கியிருக்கிறார்.



கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளைச் செய்த சோசலிசத்தின் மீது இவரை 60 மணி நேரம் விசாரித்ததால் (பல்கேரியாவுக்கு பயணம் செய்தபோது) வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம். நமது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை நிர்வாணமாக்கி சோதனையிட்டார்களே. ஞாபகமிருக்கிறதா நாராயணமூர்த்தி அவர்களே?. 60 மணி நேர விசாரணை உங்களை முதலாளித்துவவாதியாக மாற்றியது நியாயம் என்றால், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரை காட்டுமிராண்டித்தனமாக அமெரிக்க அரசு நிர்வாணமாக்கியது ஒன்றே போதுமே, இந்த நாடு முழுவதும் இடதுசாரி மயமாவதற்கு.



நாசகரப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசையோடு, அவ்வாறு செல்வது விரைவு படுத்தப்பட வேண்டும் என்ற அவசரம் அவரது குரலில் தெரிகிறது.



நான் மனதால் முதலாளித்துவவாதி. இதயத்தால் சோசலிசவாதி என்று ஒரு பேட்டியில்(தி இந்து, 3.7.06) கூறியவர்தான் இந்த நாராயணமூர்த்தி. பணம் வந்தவுடன் இதயத்தைப் பறி கொடுத்து விட்டார் போலும். தூக்கம் கலைந்ததால் ஏற்பட்ட உளறல் போலத் தெரியவில்லை. வேஷம் கலைந்த தாகவே படுகிறது.

January 05, 2007

BJP யும் பதவிவெறியும்

றுபடியும் மூன்று வறுடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஆர்‍எஸ்‍எஸ்-ன் ஆசியுடன் அயோத்தியில் கோவில், பொது சிவில் சட்டம் மற்றும் 370வது பிரிவை நீக்குதல் போன்றவை மீண்டும் பிரதான கோஷங்களாக எழும் முயற்சி நடந்து வருவது ஆச்சரியத்தைத் தரவில்லை.


மேலும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.இதற்காக 2026ஆம் ஆண்டை காலக்கெடுவாகவும் குறித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன் யார் அந்த ராஜ்நாத்சிங் என்று கேட்குமளவுக்கு இருந்த அவர்,தற்போது நாட்டின் பிரதமருக்கான போட்டியில் களத்தில் இறங்கியுள்ளார்.போட்டியிலிருந்து விலகிக் கொள்வது பற்றி அத்வானியும் முடிவெடுக்கவில்லை. இந்த பட்டியலில் வாஜ்பாயின் பெயரும் உள்ளது, தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தது பதிவு செய்யப்பட்ட ஒன்று.


2009ஆம் ஆண்டில் வாஜ்பாயும், அத்வானியும் 80 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பிரதமர் பதவிக்கு தனக்குப் போட்டியாக வேறு யாறும் இருக்கப் போவதில்லை என்ற கணக்கில்தான் ராஜ்நாத்சிங் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். ஆர்‍எஸ்‍எஸ்-ம் அவருக்கு தனது முழு ஆதரவை அளிக்கும். இதனால்தான் சர்ச்சைக்குரிய மூன்று பிரச்சனைகளையும் ராஜ்நாத்சிங் முன்வைத்துள்ளார்.


ராஜ்நாத்சிங் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்துத்துவா என்பது வாக்குகளைப் பெற்றுத் தருவதில் ஒரு குறிப்பிட்ட அளவே பலன் தரும். அவர் முன் நிறுத்தும் மூன்று விஷயங்களையும் ஆட்சியில் இருந்தபோது கிடப்பில் போட்டிருந்தது அவருக்கு நினைவிருக்கும். தற்போது பதவி நாற்காலி தொலை தூரத்தில் இருக்கும்போது, கோவில் அங்கேயே கட்டுவோம் என்ற பாடலை அவர் தயக்கமில்லாமல் பாடலாம்.ஆனால் 2009ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.



- 'தி இந்து ' தலையங்கத்தின் (டிச.26) பகுதிகள்.


January 02, 2007

நீதியின் படுகொலை

இராக்கின் எண்ணெய் வளத்தை களவாடுவதற்காக, பொய்யான புகார்களைகூறி அந்த நாட்டை ஆக்கிரமித்த அமேரிக்க - பிரிட்டன் அரக்க அரசுகள் அந்த நாட்டின் நீதித்துறையையும் ஆக்கிரமித்தது. அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேனை கைது செய்து விசாரனை என்ற பெயரில் வெட்கம்
கெட்ட முறையில் நாடகம் ஒன்றை நடத்தினர். இதன் கடைசிக் காட்சியாக சதாம் உசேனை தூக்கில்போட்டு தனது வெறித்தனத்தின் கோரமுகத்தை ஏகாதிபத்தியம் வெளிப்படுத்தியுள்ளது. 'ஏகாதிபத்தியம் மனித குலத்தின் விரோதி' என்று மாமேதை லெனின் கூறியதான் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் தனத்தை ப.ஜ.க வைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன.


இராக்கை ஆக்கிரமித்ததில் தொடங்கி,சதாம் உசேன் தூக்கிலிட்டு கொல்லப்பட்டது வரை ஐ.நா. சபை நடந்துக்கொண்ட விதம், அது ஒரு உலக அமைப்பு என்ற நம்பகத்தன்மையை இழந்து அமேரிக்காவின் கைப்பாவை என்ற எண்ணத்தையே ஏற்படுத்துக்கிறது.


ஆனால் நம் மத்திய அரசு , ஏமாற்றமளிக்கிறது, துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தைகளுடன் தனது வருத்தத்தை முடித்துக்கொண்டது, அமேரிக்காவின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேன்டும் என்ற எண்ணத்தையே இது வெளிப்படுத்துகிறது.


இராக்கில் இன்று நடந்தது உலகின் எந்த நாட்டிலும் இனி நடக்கக்கூடாது.


வல்லரசு நாடுகளை எதிர்த்து வளர்முக நாடுகள் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை இராக் துயரம் எடுத்துக் காட்டியுள்ளது.


உலகப்பந்தை அமேரிக்க ஓநாய் கபளீகரம் செய்ய அனுமதிக்ககூடாது.